Wednesday, April 19, 2017

மிஃராஜின் தத்துவம்_தொடர 01

மிஃராஜின் தத்துவம்_தொடர 01

கலீபத்துல் காதிரி நக்ஷபந்தி, மௌலவி. பாஸில், ஷெய்க் ஏ.எல்.பதுறுத்தீன் ஸுபி (ஷர்க்கி, பரேலவி) ஹஸரத் அவர்கள்

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வாழ்விலும், இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் மிஃராஜ் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.

அடியானுக்கும், அல்லாஹ்வுக்குமிடையிலான நெருக்கத்தின் எல்லையையும் அந்நெருக்கத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் மிஃராஜ் விளக்குகிறது.

ஆன்மீக பயணத்தின் யதார்த்தமான விளக்கமாகவும், ஆன்மாவின் ஆற்றலின் வெளிப்பாடாகவும் மிஃறாஜ் நிகழ்வு அமைகிறது.

முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நபிமார்களின் நாயகர் என்பதையும், மலக்குகள், அர்ஷ், குர்ஷ் அனைத்தையும் விட மேலானவர்கள் என்பதையும் மிஃறாஜ் நிரூபித்துக் காட்டுகின்றது.

வேந்தர் நபியவர்கள் பிரபஞ்சத்தில் எதிலும் தேவையற்றவர்கள் என்பதையும், வல்லநாயனான அல்லாஹ்விடத்தில் மாத்திரமே தேவையுள்ளவர்கள் என்பதையும் மிஃறாஜ் சுட்டிக் காட்டுகின்றது.

ஆன்மீகப் படித்தரங்களில் அடிமைத்துவமே மேலானது என்பதையும், அதன் மூலமே எஜமானான இரட்சகனை அடையலாம் என்பதையும் மிஃறாஜ் விளக்கிக் காட்டுகின்றது.

இவ்வாறு பல்வேறு தத்துவங்களை உள்ளடக்கியுள்ள மிஃறாஜினை பின்வருமாறு ஆராயலாம்.
1. மிஃறாஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?
2. மிஃறாஜில் பொதிந்துள்ள தத்துவம் என்ன?
3. மிஃறாஜ் கூறும் படிப்பினை என்ன?

மிஃறாஜ் பயணம் ஏன் விண்ணகத்தில் ஏற்பாடாகியது?

நபிமார்களிடத்தில் சிதறிக் காணப்பட்ட அனைத்து அற்புதங்களும் அஹ்மது நபியிடத்தில் முழுமையாகக் காணப்பட்டன. நபிமார்களுக்கெல்லாம் நாயகமானவர் நபியுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் என்பதை நிரூபித்துக் காட்டும் முக்கிய அம்சமாகவே மிஃராஜ் நிகழ்வு அமைகிறது. இதனை பின்வருமாறு நோக்கலாம்.

1. நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தூர்சீனா மலையில் அல்லாஹ்வுடன் வசனித்தார்கள். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான்காம் வானம் உயர்த்தப்பட்டார்கள். எனவே நபியுல்லாஹ் நான்காம் வானம் தாண்டிச் சென்று அல்லாஹ்வை தரிசிக்க வேண்டியதால் விண்ணகம் சென்றார்கள்.

2. அர்ஷிலிருந்து பர்ஷ் வரையிலான அனைத்தும் அண்ணலம் பெருமானாரின் ஒளியிலிருந்து அவர்களுக்காகவே படைக்கப்பட்டன. படைப்பினங்களின் முதலானவரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் படைப்பினங்களின் அவசியத் தேவைகள் எதிலும் படைப்பினங்கள் பால் தேவையற்றவர்கள் என்பதையும் படைத்தவனிடம் மட்டுமே அவர்கள் தேவையுள்ளவர்கள் என்பதையும் எடுத்துக் காட்டவேண்டியதன் நிமிர்த்தமாக, அர்ஷுக்கும் மேலால் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் விண்ணகம் சென்றார்கள்.

3. நபிமார்கள் அனைவரும் வானவர் தூதர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மூலமே அல்லாஹ்வைப் பற்றியும், சொர்க்கம், நரகம் பற்றியும் அறிந்து மக்களுக்கு விளக்கம் கூறினார்கள். ஆனால் ஏந்தல் நபியவர்கள் ஏனைய நபிமார்களைப் போன்று இரண்டாம் தரப்பு செய்திகளைக் கூறாமல் நேரடியாகவே அல்லாஹ்வையும், சொர்க்கம், நரகம் முதலியவற்றையும் நேரில் கண்டு கூறும் ஷாஹிதாக இருக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்பினான். அதனால் விண்ணகம் நோக்கிய பயணத்திற்கு ஏற்பாடு செய்தான்.

�எனக்கு நான்கு அமைச்சர்கள் உள்ளனர். இருவர் மண்ணுக்கும் மற்றுமிருவர் விண்ணுக்கும்� என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.

மண்ணுக்கான அமைச்சர்கள்.
1. அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு
2. உமர் ரழியல்லாஹு அன்ஹு

விண்ணுக்குரிய அமைச்சர்கள்.
1. ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்
2. மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம்
அவர்களுமாவர்.
நூல் : மிஷ்காத்

மன்னரின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் நிர்வாகத்தை கண்காணிப்பது அமைச்சர்களின் கடமை. மண்ணகத்தின் நிர்வாகத்தை நேரில் அவதானித்துக் கொண்டிருக்கும் நபியுள்ளாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை விண்ணகத்தின் நிர்வாகத்தையும் ஒருமுறை நேரில் வந்து பார்த்துவிட்டுச் செல்லுமாறு விண்ணகத்திற்குப் பொறுப்பான இரு அமைச்சர்களையும் நேரில் அனுப்பி அழைப்பு விடுத்தான் அகிலத்தை ஆளும் வல்ல நாயன். அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று விண்ணகம் சென்றார்கள் வேந்தர் நபியவர்கள்.

4. �ஒவ்வொன்றும் அதன் அசலை நாடிச் செல்லும்� என்பது நபிமொழி

இந்த வகையில் கஃபத்துல்லாஹ் அமைந்துள்ள புனித இடமே பூமியின் அடிப்படை நிலமாகும். அதனால் பூமியின் எப்பகுதியிலும் சரி வாழும் மனிதர்கள் தாய் நிலமாகிய மக்கமா நகர் சென்று ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுகின்றனர்.

அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் தாய்ப்பள்ளி மக்கமா நகரில் இருக்கும் கஃபாவாகும். அதனால் தாய்ப் பள்ளியாகிய கஃபாவை கிப்லாவாக ஆக்கி உலக முஸ்லிம்கள் தொழுகின்றனர்.

ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டதால், பெண்ணுக்கு ஆண் அடிப்படையாக இருக்கின்ற காரணத்தினால் ஆணுக்கு வழிப்பட்டவளாக ஆணின் துணையை நாடிச் செல்கிறாள்.

படைப்பினங்கள் அனைத்துக்கும் அண்ணல் அஹ்மத் நபியின் ஒளியே அடிப்படையாக இருப்பதால் அனைத்துப் படைப்பினங்களும் அஹ்மது நபியை விசுவாசிக்கின்றன. அன்னாரின் வேதமே இறுதி வேதமாகவும், முழுமையான வேதமாகவும் அங்கீகரிக்கப்பட்ட வேதமாகவும் அமைந்திருக்கிறது. அனைத்து நபிமார்களும் அஹமது நபியைப் பற்றி அவர்களின் உம்மத்தினருக்கு உபதேசித்து வந்தனர். அன்னாரிடமே மறுமையில் அபயம் தேடி நபிமார்கள் உட்பட அனைத்து மக்களும் செல்வர்.

அஹ்மது நபியின் ஒளிக்கு அல்லாஹ்வின் ஒளியே அடிப்படையாக இருப்பதினால் அதனை இடம், காலம் என்ற படைப்பின் எல்லைகளைத் தாண்டிச் சென்று சந்திக்க வேண்டி ஏற்பட்டது. அதனால் விண்ணகம் சென்றார்கள்.

மிஃராஜின் தத்துவம்

மிஃராஜ் பயணம் மூன்று கட்டங்களில் நடந்திருக்கின்றன.
1. மக்காவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரையிலான பயணம்.
2. மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து சித்ரதுல் முன்தஹா (அர்ஷ்) வரையிலான பயணம்.
3. அர்சுக்கு மேலால் காலம், இடம் கடந்த வெட்ட வெளியிலான பயணம்.

இம்மூன்று கட்டப் பயணமும் மனிதனின் மூன்று கட்ட நிலையினை எடுத்துக் காட்டுகின்றன.

1. உடல் - பிரபஞ்சம் சார்ந்த பகுதி
2. ஆன்மா - ஒளி, அமரத்துவ நிலை சார்ந்த பகுதி
3. யதார்த்த நிலையிலான பகுதி. இது அல்லாஹ்வுடைய நெருக்கத்தின் தொடர் பகுதி.

ஒவ்வொன்றும் அதன் உச்சத்திற்கு செல்வதே அது சார்ந்த பகுதியின் மிஃறாஜாகும்.

முத்திரை நாயகமான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இம்மூன்று பகுதிகளிலும் முழுமையானவர்களாக இருந்ததினால் மிஃறாஜ் மேற்படி மூன்று கட்டங்களிலும் நிகழ்திருக்கின்றன.

மனிதநிலை சார்ந்த மிஃறாஜ்

மண்ணில் வாழும் மனிதர்களுள் சிறப்பானவர்கள் நபிமார்கள், றஸூல்மார்கள். இவர்கள் அனைவரும் மண்ணில் வாழ்ந்தவர்கள். ஆதலால் மண்ணுக்கு அழைக்கப்பட்டு இவர்கள் அணனவரும் பின்நிற்க முஹம்மது முஸ்தபா  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முன்னின்று இமாமத் செய்தபோது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உடல் சார்ந்த மிஃறாஜ் நிறைவேறியது. இப்பயணம் �இஸ்ரா� என்று அழைக்கப்படுகின்றது.

மலக்கானிய்யத் சார்ந்த மிஃறாஜ்

விண்ணில் வாழும் உயிரிணங்கள் அனைத்தும்  ஒளியினால் படைக்கப்பட்ட சூக்கும உடல் சார்ந்த படைப்புக்களாகும். இவர்களின் நாயகமானவர் வானவர் தூதர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் ஆவர். மிஃறாஜ் பயணத்தில் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் கூடவே வந்து �சித்ரத்துல் முன்தஹா� என்ற இடத்தில் பின்வாங்கிய கட்டத்தில் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மலக்கானிய்யத்தின் அல்லது நூறானிய்யத்தின் பகுதியின் மிஃறாஜ் நிகழ்ந்தது.

யதார்த்த நிலையான மிஃறாஜ்

சித்ரத்துல் முன்தஹாவிலிருந்து இடம், காலம் என்று கூற முடியாத வெட்டவெளிக்கு றfப் றfப் என்ற வாகனத்தில் சென்ற பயணம் அல்லாஹ்வுடன் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மாத்திரமான தொடர்பின் உச்சக் கட்டமாகும். இப்பயணத்தை இஃறாஜ் என்று மஹ்பூபே இலாஹி காஜா நிஸாமுத்தீன் வலியுல்லாஹ் (டில்லி) குறிப்பிடுகின்றார்கள்.

இப்பயணத்தில் நபியவர்கள் அல்லாஹ்வை திரையின்றி நெற்றிக் கண்ணால் பார்த்தார்கள். அவனுடன் வசனித்தார்கள். அந்த நேரத்தில் மூன்றாம் கட்ட மிஃறாஜ் நிகழ்ந்தது. இம்மூன்று கட்ட நிகழ்வினை சூறா பனி இஸ்ராயிலின் ஆரம்ப திருவசனம் சுட்டிக் காட்டுகின்றது.

1. மஸ்ஜிதுல் ஹறாமிலிருந்து  மஸ்ஜிதுல் அக்ஸா வரையிலான பயணம் �இஸ்ரா� என்பதையும்,

2. �எமது அத்தாட்சிகளை காண்பிப்பதற்காக� என்ற பகுதி விண்ணகப் பயணத்தை (மிஃறாஜை)யும்,

3. �அவன் கேட்கி்ன்றவன், பார்க்கின்றவன்� என்ற இறுதித் தொடர் அர்ஷுக்கு மேலால் நிகழ்ந்த பயணத்தையும் சுட்டிக்காட்டுகி்ன்றது.

மிஃறாஜின் படிப்பினை

1. மிஃறாஜ் பயணத்தின் ஆரம்பத்தில் பெருமானாரின் உடல் பிளக்கப்பட்டு இதயம் வேறாக்கப்பட்டு இதயத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்ட பின் புதிதாக சில பகுதிகள் இதயத்துள் வைத்து பொருத்தப்பட்ட நிகழ்ச்சி புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில் காணப்படுகின்றன.

2. மிஃறாஜ் பயணம் மக்காவிலிருந்து சித்ரத்துல் முன்தஹா வரையிலும் �புராக்� என்ற வாகனத்திலே மேற்கொள்ளப்பட்டிருக்கி்றது.

�புராக்� என்பது �பர்க்� - மின்னல் என்ற பொருளைக் கொடுக்கும் சொல். இதனை மின்சாரத்தில் இயங்கும் ஒளி வேகங் கொண்ட வாகனம் என்றும் எடுத்துக்கொள்ள முடியும்.

3. காற்று மண்டலம், நெருப்பு மண்டலம் ஆகிய அனைத்து மண்டலங்களையும் தாண்டியதாக இப்பயணம் அமைந்திருக்கின்றது.

4. காலம், இடம், திசை இல்லாத அந்தர வெட்ட வெளியில் அண்ணலம் பெருமானாரின் இறுதிப் பயணம் அமைந்திருக்கின்றது.

சிந்திக்க வேண்டியவை

1. பெருமானாரின் உடலின் யதார்த்தம் மண்ணாயின் கூரிய கத்தியால் உடல் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சுட்டுவிரலினாலேயே உடல் கிழிக்கப்பட்டது. அப்போது குருதி கொப்பளித்திருக்க வேண்டும். இதுவும் நடக்கவில்லை. ஒரு சொட்டு குருதியும் வெளியேறவில்லை.

இதயம் வேறாக்கப்பட்டபோதும் அதன் அடிப்பகுதிகள் நீக்கப்பட்டபோதும் அவர்கள் உணர்விழந்திருக்க வேண்டும். மாறாக முழு உணர்வுடன் நடந்தவற்றை பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். இச்செய்கை மூலம் பின்வரும் படிப்பினைகளை பெறுகின்றோம்.

பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடத்தில் கீழ்வரும் மூன்று நிலைகளும் காணப்பட்டிருகின்றன.

1. யுத்தத்தி்ல் காயப்பட்டபோது உடலிலிருந்து குருதி வந்தபோதும், அகழி தோண்டும்போது பசியின் கடுமையால் மணிவயிற்றில் கல்லைக் கட்டியபோதும் உடலியல் (பஷரிய்யத்) மிகைத்தவர்களாக இருந்தார்கள். அதனால் மனிதத்துவ நிலை அவர்களில் மேலோங்கிக் காணப்பட்டது.

2. மிஃறாஜ் பயணத்தின் முன் உடல் கிழிக்கப்பட்ட போதும், தொடர் நோன்பு நோற்றபோதும், தூக்கமின்றி விடியவிடிய வணங்கியபோதும், விண்ணகப் பயணத்தில் காற்று, நெருப்பு மண்டலங்களைக் கடக்கும்போதும் மலக்கானிய்யத் மிகைத்துக் காணப்பட்டார்கள்.

அதனால் உடலிலிருந்து குருதியோ, நோன்பினால் பசியின் கொடுமையோ, காற்றில்லாததால் மூச்சுத் திணறலோ, கடுமையான வெப்பத்தால் கருகுதலோ ஏற்படவில்லை.

3. �இதற்கப்பால் ஒரு நூல் அளவு தாண்டினால் எரிந்து சாம்பலாகிவிடுவேன்� என்று கூறி ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பின்வாங்கிய போது அச்சமோ, ஆயாசமோயின்றி அடக்கமாகவே முறுவலித்தவர்களாக பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் யதார்த்தத்தை அல்லாஹ்வும், அவனது ஹபீபும்தான் அறிவர். ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். இம்மூன்று பயணங்களிலும் பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்�அப்தாக� - அடியாராகவே இருந்துள்ளார்கள்.

படைப்பினங்களின் சகல தரப்பையும் சுட்டும் பொதுவான சொல் �அப்து� என்பதை தவிர வேறொன்றில்லை. ஆதலால் �தனது அப்தை இராவழி நடாத்திய நாயன் தூயவன்� என்று அல்லாஹ் கூறுகின்றான்.

�இராவழி நடாத்திய நாயன் தூயவன்� என்ற கூற்று இப்பயணம் அல்லாஹிவின் விருப்பத்தின் அடிப்படையில் அவனது தனிப்பெரும் ஆற்றலால் நிகழ்ந்தது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

மிஃறாஜ் பயணம் அல்லாஹ்வினுடனான சந்திப்பின் ஒழுக்கத்தை எடுத்துக் காட்டும் அம்சமாகவே அமைந்திருப்பதை இவ்வாறு அறியலாம்.

1. பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் இதயம் பரிசுத்தமாக்கப்பட்டு ஈமான் நிரப்பப்பட்ட விடயம்.

பரிசுத்தமான உள்ளமுடையவர்கள் மாத்திரமன்றி நிரப்பமான தூய ஈமான் உள்ளவர் மாத்திரமே அல்லாஹ்வின் திருக்காட்சியை காணும் தகுதி பெற்றவராவார் என்பதை உணர்த்திக் காட்டப்படுகி்ன்றது. இதனையே பரிசுத்தமான உள்ளமுடையவரே வெற்றி பெற்றார்� என்ற திருவசனம் நமக்கு உணர்த்துகி்ன்றது.

2. மஸ்ஜிதுல் அக்ஸாவில் நபிமார்களுடனான சந்திப்பு,

புனிதப் பயணங்கள் நல்லவர்களின் ஆசியுடன் அல்லது நல்லவர்களின் ஸியாரத்துடன் அமைதல் வேண்டும் என்பதை புலப்படுத்துகி்றது. புராக்கிலான பயணமும், ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழித்துணையும் இறைவழிப் பயணம் சடநிலையில் அல்லாமல் ஆன்மீக நிலையில் ஏற்கனவே வழியறிந்த, தெரிந்த காமிலான ஷெய்கின் துணையுடனே அடக்கமாக அமைதல் அவசியம் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது.

ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம், புராக், ஆகியவற்றின் பின்வாங்குதலும், றfப் றfப் இன் வருகையும், அதற்கப்பால் உள்ள பயணமும், மனித முயற்சியும், வழிகாட்டுதலும் குறிப்பிட்ட எல்லை வரையிலும்தான் என்பதையும் அதற்கப்பால் உள்ள பயணம் அதாவது - முக்தி என்பது அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையில் - �நிஃமத்தில்� - அருளில்தான் தங்கியிருக்கிறது என்பதையும் அவன் நாடியவர்களை மட்டுமே நேர்வழி காட்டி முக்தி பெறச் செய்வான் என்பதையும் காட்டுகிறது.

இதனால்தான் தொழுகையில் நேரிய வழியை மட்டும் கேட்காமல் �நீ யாருக்கு - நிஃமத் செய்தாயோ அவர்கள் சென்ற வழியில் செலுத்து நாயனே!� என்று கேட்கின்றோம்.

தொடரும்