Sunday, January 22, 2017

ஈமானும் இஸ்லாமும்

ஶ═════════════════════════
            ஈமானும் இஸ்லாமும்
═════════════════════════
கலீபதுல் காதிரி, மௌலவி. பாஸில்,            ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள்.

ஈமான்

கேள்வி : ஈமான் என்றால் என்ன?

பதில் : ஈமான் என்றால் அல்லாஹ்வையும், அவனது மலக்குகளையும், வேதங்களையும்,
ரஸுல்மார்களையும், இறுதி நாளையும், நன்மை - தீமைகள் இறைவனது கற்பனையில் உள்ளது என்றும் நம்பிக்கை கொள்தல்.
“எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும், மலக்குகளையும்,
வேதத்தையும், நபிமார்களையும் மெய்யாகவே விசுவாசித்து“
(அல்குர்ஆன் 02 : 177)

“(மனிதர்களே! நம்முடைய) தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே விசுவாசிக்கின்றார் (அவ்வாறே மற்ற) விசுவாசிகளும் (விசுவாசிக்கின்றனர் இவர்கள் யாவரும்) அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குகளையும்,
அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் விசுவாசிக்கின்றனர்“
(அல்குர்ஆன் 02 : 285)

களா கத்றும் ஈமானுடைய ஒரு பகுதி. அதனை நம்புவதும் கடமையாகும். களா கத்ரைப் பற்றி அருள் மறை குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
“ஒவ்வொரு பொருளும் அவன் (அல்லாஹ்) இடம் (அவனது கற்பனையில்) குறிப்பிடப்பட்டே இருக்கின்றது“
(அல்குர்ஆன் 13 : 08)

“ஒவ்வொரு பொருளின் பொக்கிஷங்களும் நம்மிடம் இருக்கின்றன எனினும் அவற்றை (அந்தந்த காலத்தில் அவற்றிற்கு) குறிப்பிட்ட அளவில்தான் நாம் இறக்கி வைக்கிறோம்“.
(அல்குர்ஆன் 15 : 21)

“நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் (குறிப்பான அளவின்படியே சிருஷ்டித்திருக்கிறோம்“.
(அல்குர்ஆன் 55 : 49)

ஒருமுறை வானவர் கோன் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் முன் அமர்ந்து “ஈமான் என்றால் என்ன?“ என்று கேட்கிறார்கள்.
“அல்லாஹ்வையும்,
மலக்குகளையும், வேதங்களையும்,
ரஸுல்மார்களையும், இறுதி நாளையும், நன்மை தீமை யாவும் அல்லாஹ்வின் கற்பனையில் உள்ளது என்று விசுவாசம் (ஈமான்) கொள்ள வேண்டும்“ என்று நபியவர்கள் பதிலிறுத்தார்கள். அதுகேட்ட வானவர் ஜிப்ரயீல் “தாங்கள் உண்மை உரைத்தீர்கள் யாரஸுலல்லாஹ்“ எனச் சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உமர் ரழியல்லாஹு அன்ஹு

நூல் : புகாரி முஸ்லிம்

கேள்வி : அல்லாஹ்வை எவ்வாறு விசுவாசிக்க வேண்டும்?

பதில் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே; அவன் ஏகன்; இணை துணை அற்றவன்; நிறைவான தன்மைகளைக் கொண்டவன்; குறைவான குணங்களை விட்டும் பரிசுத்தமானவன்; இடம், திசை,
காலம், உருவம் ஆகியவற்றை விட்டும் தூய்மையானவன் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். மேலும், அல்லாஹ்வின் மொத்தமான இலட்சணங்களை விபரமாக அறிதலும் வேண்டும்.

“நபியே! மனிதர்களை நோக்கி நீர் கூறும், அல்லாஹ் ஒருவன்தான். (அந்த) அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். (யாவும் அவன் அருளையே எதிர்பாக்கின்றன! அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு நிகராக எதுவுமில்லை!“ (சூரத் இக்லாஸ்)
“அவன் மிக பரிசுத்தமானவன். அவன்தான் யாவரையும் அடக்கி ஆளுகி்ன்ற ஒரே ஒருவனாகிய அல்லாஹ்“
(அல்குர்ஆன் 39 : 4)

“வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வங்கள் இருந்திருந்தால் அவை இரண்டும் (முரண்பட்டு) அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ் அவர்கள் வர்ணிக்கும் (குறைவான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன்“.
(அல்குர்ஆன் 21 : 22)

“அல்லாஹ் சந்ததி எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் வேறு நாயனுமில்லை“.
(அல்குர்ஆன் - 23 : 91)

அல்லாஹ்வின் பண்புகள்

கேள்வி : அல்லாஹ்வுக்கு இருக்க வேண்டிய இலட்சணங்கள் யாவை?

பதில் : உள்ளமை, பூர்வீகம்,
நிலைபடுதல், சிருஷ்டிகளுக்கு மாற்றம், தன்னைக் கொண்டு தனித்து நிற்றல், ஏகனாக இருத்தல்,
சக்தி, நாட்டம், அறிவு, ஜீவன்,
கேள்வி, பார்வை, பேச்சு. (இவற்றுக்கு எதிரானவை இறைவனுக்கு இருக்கத் தகாதவைகள் ஆகும்).

கேள்வி : அல்லாஹ்வுக்கு இருக்கத் தகாத பண்புகள் யாவை?

பதில் : இல்லாமை, புதிது, அழிவு,
படைப்பினங்களுக்கு ஒப்பாதல், இடம் - பொருள் - பிறவற்றில் தேவையாதல், பன்மையாதல்,
இயலாமை, வெறுக்கும் தன்மை,
மடமை, மரணம், செவிடு, குருடு,
ஊமை போன்றவை. மேலும் ஒன்றைச் செய்தலும்,
செய்யாமையும் அவனது விருப்பத்திற்கிணங்கியது. எப்பொருளையும் படைப்பதும்,
அழிப்பதும் அவன் இஷ்டத்தைப் பொறுத்ததாகும். எதையும் செய்வது அவன் மீது கடமையாகாது.

மலக்குகளைப் பற்றிய நம்பிக்கை

கேள்வி : மலக்குகளைப் பற்றி எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும்?

பதில் : மலக்குகள் சங்கையான நல்லடியார்கள். அல்லாஹ் இட்ட ஆணைகளை மாறு செய்யாமல் செவ்வனே செய்பவர்கள். அவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள். நாய்,
பன்றிகளின் கோலங்களைத் தவிர்த்து மற்ற எல்லாக் கோலங்களிலும் வர சக்தி பெற்றவர்கள். நீண்ட தொலை தூரங்களை நொடிப் பொழுதில் கடப்பார்கள். இவர்கள் ஆணுமல்ல,
பெண்ணுமல்ல. ஊண் உறக்கமற்றவர்கள். மனைவி, மக்கள், ஆசாபாசங்களை விட்டும் தூய்மையானவர்கள். இவர்களின் மொத்த எண்ணிக்கையை இறைவனே நன்கறிந்தவன். இவர்களில் பத்து பேர்களின் பெயர்களை அறிதல் அவசியம்.

கேள்வி : அந்த பத்து பேர்கள் யார்?

பதில் : வானவத் தூதர் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம், மழைக்காக நியமிக்கப்பட்டவர் மீக்காயீல் அலைஹிஸ்ஸலாம், ஸுர் ஊதுபவர் இஸ்ராபீல் அலைஹிஸ்ஸலாம்,
உயிர்களைக் கைப்பற்றுபவர் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம்,
கப்றினுள் கேள்விகள் கேட்பவர்கள் முன்கர் அலைஹிஸ்ஸலாம் நகீர் அலைஹிஸ்ஸலாம், சொர்க்கக் காவலர் றிழ்வான் அலைஹிஸ்ஸலாம் நரகக் காவலர் மாலிக் அலைஹிஸ்ஸலாம், நன்மை தீமைகளை எழுதுபவர்கள் றகீப் அலைஹிஸ்ஸலாம் அதீத் அலைஹிஸ்ஸலாம் ஆகிய பத்து பேர்கள்.
மேலும் அர்ஷை நான்கு மலக்குகள் சுமக்கின்றனர். மறுமை வந்துவிட்டால் எட்டுப்பேர் அர்ஷை சுமப்பர்.

வேதங்களைப் பற்றிய நம்பிக்கை

கேள்வி : வேதங்களைக் குறித்து எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும்?

பதில் : வேதங்கள் அல்லாஹ்வின் பேச்சு, இறைவன் தனது திருத்தூதர்களுக்கு வானவர் மூலம் வேதங்களை அருளினான். அவற்றில் காணப்படும் அனைத்தும் சத்தியமானவை. நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸபூர் வேதமும், நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தவ்றாத் வேதமும், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இன்ஜீல் வேதமும், இறுதித் தூதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் புர்கான் வேதமும் அருளப் பெற்றனர் என்று ஈமான் கொள்ள வேண்டும்.

ரஸுல்மார்களைப் பற்றிய நம்பிக்கை

கேள்வி : ரஸுல்மார்களை எவ்வாறு ஈமான் கொள்ள வேண்டும்?

பதில் : மக்களை சத்திய வழியில் அழைக்கவும், அவர்களுக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுத்து பரிசுத்தப் பண்புள்ளவர்களாக,
அறிவும், நெறியுமுள்ளவர்களாக மாற்றவும் அல்லாஹ் தன் திருத்தூதர்களை அனுப்பினான். அவர்களுக்கு நான்கு பண்புகள் அமைந்திருத்தல் அவசியம். வேறு நான்கு பண்புகள் அவர்களிடம் இருத்தல் கூடாது.

கேள்வி : அவர்களுக்கு அமைய வேண்டிய பண்புகள் யாவை?

பதில் : வாய்மை, நம்பிக்கை,
விவேகம், தமது தூதை எத்தி வைத்தல் ஆகியன.

கேள்வி : நபிமார்களுக்கு இருக்கத்தகாத பண்புகள் யாவை?

பதில் : பொய்மை, மோசடி, மந்தப் புத்தி, தூதை மறைத்தல். ரஸுல்மார்களின் புனிதத் தன்மைகளுக்கு மாசு கற்பிக்காத மனித இயல்புகள் ஏற்படலாம். அவை சாப்பிடுதல், தூங்குதல்,
திருமணம் முடித்தல், குழந்தைகள் பெற்றுக் கொள்ளுதல்,
கடைத்தெருவில் நடந்து செல்லல்,
வர்த்தகம் புரிதல், தொழில் செய்தல் போன்றவை.
ரஸுல்மார்களுக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை அல்லாஹ் வழங்கி,
அவர்களது தூதுத்துவத்தை உறுதி செய்கின்றான். உதாரணமாக, கழியை பாம்பாக மாற்றும் ஆற்றலை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும்,
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மணிக்கரத்தின் விரல்களுக்கிடையில் நீர் உற்றெடுத்துக் கிளம்பும் ஆற்றலையும் வழங்கினான். நபிமார்களுக்கு இறைவன் வழங்கிய அற்புதங்களில் இன்றளவும் நீடித்து புனிதம் மாறாது நிலைத்திருப்பது அருள்மறை அல்குர்ஆன் ஆகும்.

கேள்வி : ரஸுல்மார்கள் எத்தனை பேர்?

பதில் : அவர்களின் மிகச்சரியான எண்ணிக்கையினை இறைவனே அறிவான். என்றாலும் அவர்களில் 25 பேர்களின் பெயர்களை அறிந்திருத்தல் வேண்டும்.

கேள்வி : அந்த 25 பேர்கள் யார்?

பதில் : ஆதம், இத்ரீஸ், நூஹ், ஹூது,
ஸாலிஹ், லூத், இப்றாஹீம்,
இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப்,
யூசுப், ஸுஐப், ஹாரூன், மூஸா,
தாவூத், சுலைமான், ஐயூபு,
துல்கிப்லு, யூனுஸ், இல்யாஸ்,
அல்யஸஃ, ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா,
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஅலைஹிமுஸ்ஸலாத்து வஸ்ஸலாம்.

மறுமை பற்றிய நம்பிக்கை

கேள்வி : மறுமை என்றால் என்ன?
மறுமை பற்றி எப்படி ஈமான் கொள்வது?

பதில் : மறுமைநாள் என்பது யுக முடிவான - கியாமத் நாளாகும். இறுதிநாள் உண்டு என ஈமான் கொள்ள வேண்டும். அந்நாளில் எல்லோரையும் மீண்டும் உயிர் பெறச்செய்து கேள்விகள் கேட்கப்படும். அமல்கள் நிறுக்கப்படும். பின்னர் ஸிராத் பாலத்தை கடப்பர். இறை நீதியின்படி ஒரு பகுதியினர் நரகில் தள்ளப்படுவர். இறை கருணையினால் மற்றொரு பகுதியினர் சுவனத்தில் நுழைவிக்கப்படுவர்.

கேள்வி : களா கத்ரைக் குறித்து எவ்வாறு நம்பிக்கை கொள்ள வேண்டும்.

பதில் : படைப்பினங்கள் படைக்கப்படுவதற்கு முன்னரே நன்மை தீமைகளை இறைவன் எழுதி வைத்துவிட்டான் என்று உறுதியாக நம்பி விசுவாசம் கொள்ள வேண்டும். மேலும்,
நடந்து முடிந்த - நடக்கின்ற - நடக்கவிருக்கின்ற அனைத்தும் அல்லாஹ்வின் கற்பனை,
நாட்டத்தின்படியே அமைந்துள்ளது என்றும் நம்பி்க்கை கொள்ள வேண்டும்.
இஸ்லாம்

கேள்வி : இஸ்லாம் என்றால் என்ன,

பதில் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே என்றும்,
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவனது திருத்தூதர் என்றும், சாட்சி சொல்லுதல், ஐவேளை தொழுதல்,
ஸகாத் கொடுத்தல், ரமழான் மாதத்தில் நோன்பு வைத்தல், வசதி படைத்தவர் ஹஜ் செய்தல் ஆகியன இஸ்லாமாகும்.

கேள்வி : சாட்சி சொல்லுதல் என்பதின் பொருள் என்ன?

பதில் : நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியும் உரிமையும் படைத்தவன் ஏக இறைவன் ஒருவனே என்று அறிந்து,
புரிந்து, உண்மைப்படுத்துதலும்,
அண்ணல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹ் மனித சமுதாயம் முழுமைக்கும் தூதராக அனுப்பி வைத்தான். அன்னாரை ரஸுலாக்கிய நேரத்தில் அவர்களுக்கு வயது நாற்பது. வானம், பூமியிலுள்ள அனைத்து சிருஷ்டிகளிலும் அன்னாரே சிறப்பானவர்கள். உயர்வானவர்கள். மக்காவில் பிறந்தார்கள். 53 வயது ஆனபோது, இறைவன் மதீனப் பெருநகருக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு அவர்களுக்கு கட்டளை இட்டான். 63ஆம் வயதில் மதீனாவிலேயே அன்னார் இம்மை வாழ்வை முடித்துக் கொண்டார்கள் என்று நம்பிக்கை கொள்வதும்,
உண்மைப்படுத்துவதுமே சாட்சி சொல்லுதல் என்பதன் பொருள்.

நபிகளாரின் வம்சம், மனைவிகள்,
குழந்தைகள்

கேள்வி : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது தாய்,
தந்தைவழி வம்சமென்ன?
பதில் : நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது தந்தை அப்துல்லாஹ். அவரது தந்தை அப்துல் முத்தலிப் அவரது தந்தை ஹாஷிம். அவரது தந்தை அப்துல் மனாப். அவரது தந்தை குஸை. அவரது தந்தை ஹகீம்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது தாயார் பெயர் ஆமினா. அவரது தந்தை ஹவனாப். அவரது தந்தை அப்துல் மனாப். அவரது தந்தை ஜுஹ்ரா. அவரது தந்தை ஹகீம்.
தாய், தந்தை வம்சப் பரம்பரையில் வருகின்ற ஹகீம் என்பவரின் இரண்டு பிள்ளைகளில் ஒருவரான குஸை,
என்பவரிலிருந்து அண்ணலாரின் தந்தையும், ஹகீமின் மற்றொரு மகனாரான ஜுஹ்ரா என்பவரிலிருந்து அண்ணலாரின் தாயும் வருகின்றனர்.

கேள்வி : அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் குழந்தைகள் எத்தனை பேர்?

பதில் : ஏழு பேர். மூவர் ஆண்கள்,
நால்வர் பெண்கள், ஜைனப்,
ருகைய்யா, பாத்திமா,
உம்முகுல்தூம். காஸிம்,
அப்துல்லாஹ், இப்றாஹீம் இவர்களில் இப்றாஹீம் தவிர ஏனைய அறுவரும் அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா மூலமும், இப்றாஹீம் மாரியத்துல்கிப்தியா எனும் அடிமைப்பெண் மூலமும் பிறந்தனர்.

கேள்வி : அண்ணலாரின் மனைவிகள் எத்தனை?

பதில் : பன்னிரென்டு பேர். கதீஜா,
ஸௌதா, ஆயிஷா, ஹப்ஸா, ஜைனப்,
ஹிந்த், ஜைனப், ஜூவைரிய்யா,
றைஹானா, ரம்லா, ஸபிய்யா,
மைமூனா ஆகியோராகும்.

தொழுகை

கேள்வி : தொழுகை என்றால் என்ன?

பதில் : தக்பீர் கூறி ஆரம்பித்து
ஸலாமுரைத்தல் மூலமாக முடிக்கக் கூடிய சில ஷர்த்துக்களை உள்ளடக்கிய சொல்லாலும் செயலாலும் செய்யப்படும் ஒரு செயலுக்கு தொழுகை எனப்படும்.

கேள்வி : நாளொன்றுக்கு எத்தனை முறை தொழ வேண்டும்?

பதில் : சித்த சுவாதீனமுள்ள வயதுக்கு வந்த ஒவ்வொரு முஸ்லிமும் நாளொன்றுக்கு ஐவேளை தொழ வேண்டும். ஏழு வயதாகும்போது பிள்ளைகளைத் தொழுமாறு ஏவுதலும்,
தொழவில்லையாயின் பத்தாவது வயதில் அடித்தேனும் அவர்களைத் தொழச் செய்வது பெற்றோருக்கு அல்லது காப்பாளருக்கு அவசியம்.

கேள்வி : தொழுகையின் நேரங்கள் யாவை?

பதில் : 1. ஸுப்ஹ் - இது இரண்டு ரக்அத்துக்களை கொண்டது. பஜ்ர்ஸாதிக் - மெய்வெள்ளை வெழுத்த பின்னர் முதல் சூரியன் உதயம்வரை இதன் நேரம், 2. லுஹர் - நான்கு ரக்அத்துக்களை கொண்டது. சூரிய உச்சியிலிருந்து சாயத் தொடங்கியது முதல் ஒரு பொருளின் நிழல் அதே அளவுக்கு வருவதுவரை இதன் நேரமாகும். 3. அஸர் - நான்கு ரக்அத்துக்களை கொண்டது. லுஹரின் இறுதி நேரம் தொடுத்து சூரிய அஸ்தமனம்வரை இதன் நேரம். 4. மஃரிப் - இது மூன்று ரக்அத்துக்களைக் கொண்டது. சூரிய அஸ்தமனம் முதல் செம்மேகம் மறைவதுவரை இதன் நேரமாகும். 5. இஷா - நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட இத்தொழுகையின் நேரம்,
செம்மேகம் மறைவது முதல் மெய்வெள்ளை வெளுப்பது வரையாகும்.

கேள்வி : தொழுகையின் ஷர்த்துக்கள் எத்தனை?

பதில் : ஐந்து. 1. சிறிய, பெரிய தொடக்குகளிலிருந்து சுத்தமாக இருத்தல். 2. உடல், ஆடை, இடம் ஆகியன நஜீஸ்களிலிருந்து சுத்தமாக இருத்தல். 3. அவ்ரத் (ஆண்களுக்கு முட்டுக் காலுக்கும், தொப்புளுக்கும் மத்தியிலுள்ள பகுதி பெண்களுக்கு முகம், முன் கைகளைத் தவிர உள்ள இடங்கள்) மறைத்தல். 4. கிப்லாவை முன்னோக்குதல். 5. தொழுகைக்கான வக்து (நேரம்) வருதல்.

கேள்வி : தொடக்கு என்றால் என்ன?

பதில் : தொடக்குகள் சிறிய தொடக்கு, பெரிய தொடக்கு என இருவகை. சிறிய தொடக்கு ஒழு அல்லது தயம்மும் ஆகியவற்றால் நீங்குவது. குளிப்பதை கடமையாக்குவது பெரும் தொடக்கு ஆகும்.

நன்றி : வஸீலா

http://majlismuhibburrasool.com/index.php/aqeeda/414-2013-07-24-17-49-41.html